நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜி இளைஞர் மன்றம்

நேதாஜியும் ,காந்தியும் ,நேருவும் மற்றும் பல தலைவர்களும் .....

 பகுதி -1

 பகுதி -2 

1897ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பிறந்த சுபாஷ் சந்திர போஸ் இள வயதில் விளையாட்டில் ஆர்வமின்றி மிகுந்த சங்கோஜியாக இருந்தார். கட்டாக்கில் (இன்றைய ஒரிஸ்ஸா மாநிலத்தில் உள்ள பகுதி) பிறந்த போஸ், பூரி என்ற புண்ணியஸ்தலத்திற்கு வரும் சாதுக்களாலும் யாத்திரிகர்களாலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். தனது பதினைந்தாவது வயதில் விவேகானந்தருடைய பேச்சுக்களையும் எழுத்துக்களையும் படித்தவர் ராமகிருஷ்ண பரமஹம்ஸராலும் மிகவும் ஈர்க்கப்பட்டார். மிகுந்த மதிநுட்பமுள்ளவரான போஸ் பள்ளியிறுதி ஆண்டில் இரண்டாவதாக வந்து கொல்கத்தாவிலுள்ள பிரெஸிடென்ஸி கல்லூரியில் சேர்ந்தார்.

1916ம் ஆண்டு ஆங்கில விரிவுரையாளரான ப்ரொஃபஸர் ஓட்டன் இந்தியர்களைத் தரக்குறைவாகப் பேசியதால் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு மீண்டும் சேர்க்கப்பட்டு தத்துவத்தில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். அவருடைய புத்தி கூர்மையைப் புரிந்து கொண்ட அவரது தந்தையார் அவரை அரசாங்க உத்யோகத்தில் உயர் பதவியில் பார்க்க ஆசைப்பட்டு சிவில் செர்விசீல் தேர்ச்சி பெற இங்கிலாந்து அனுப்பி வைத்தார். 1920ம் ஆண்டு ஆங்கிலத்தில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மிகச்சிறப்பாக அதில் போஸ் தேர்ச்சி பெற்றார். ஆனால் அதே சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்துவிட போஸ் மன அமைதி இழந்தார். ICSல் தேர்ச்சி பெற்றாலும் ஆங்கிலேயர்களுக்கு சேவை செய்ய மறுத்து விட்டார். அந்த நேரம் காந்திஜி ஒரு மக்கள் தலைவராக உருவெடுத்த நேரம். சுபாஷ் சந்திர போஸ் இந்தியன் நேஷனல் காங்கிரஸில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றும் பொருட்டு காந்திஜியை சந்தித்தார். போஸின் பணிவான கோரிக்கையைக் கேட்டு காந்திஜி அவரை கொல்கத்தாவிலிருந்த தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸிடம் அனுப்பி வைத்தார். 1921 முதல் 1925 வரைக்கும் இடைப்பட்டக் காலகட்டத்தில் கொல்கத்தாவிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் நடந்த அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டு பலமுறை சிறை சென்றார். 1921ல் ப்ரின்ஸ் ஆஃப் வேல்ஸின் இந்திய வருகையை புறக்கணிக்கும் போராட்டத்தை வழிநடத்தியதால் சிறை பிடிக்கப்பட்டு பின்னர் இன்னொரு முறை தேஷ் பந்துவுடன் சிறை சென்றார். அப்போது தேஷ் பந்துவை பிற்காலத்தில் குருவாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு நேதாஜிக்குக் கிடைத்தது. தேஷ் பந்து கொல்கத்தாவின் மேயராகியவுடன் போஸ் முதன்மை ஆட்சித்துறை அதிகாரியாக பதவியேற்றார். பதவியில் இருந்து கொண்டே பல புரட்சியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார். அதனால் அரசாங்கம் அவரை மறுபடியும் கைது செய்து முதலில் அலிப்பூர் ஜெயிலிலும் பின்னர் பர்மாவிலுள்ள மாண்டலே ஜெயிலிலும் அடைத்தார்கள். இந்த சிறையடைப்பு அவருக்கு, எதிர்கால நடவடிக்கைகளைப் பற்றியும் புரட்சியை நெறிப்படுத்துதலைப் பற்றியும் சிந்திக்க, வேண்டிய அவகாசம் கொடுத்தது. 1925ல் தேஷ் பந்துவின் மறைவு அவரை நிலைகுலைய வைத்தது. ஆனால் மாண்டலேயில் இருந்த இரண்டு வருடங்கள் அவருக்கு வேண்டிய ஊக்கத்தையும் மனபலத்தையும் கொடுத்தது. 1926ம் ஆண்டு முடிவில் வங்காள சட்ட சபைக்கு வேட்ப்பாளராக நியமனம் பெற்றார். மே 1927ல் அவரது உடல்நலம் கருதி அவரை சிறையிலிருந்து விடுவித்தார்கள். டிசம்பர் 1927ம் ஆண்டு ஜவஹர்லாலுடன் காங்கிரஸின் ஜெனரல் செக்ரட்டரி பதவியை ஏற்றார். பின்னர் 1928ம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த சுயாட்சி நாடாக இந்தியாவை அங்கீகரிக்க வேண்டி நிகழ்ச்சி நிரலை மோதிலால் நேரு முன் வைத்தார். இதனை இளைய தலைவர்கள் எதிர்த்தார்கள். ஜவஹர்லாலும் போஸும் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கோரிப் போராடவேண்டும் என்றும் காங்கிரஸ் கமிட்டியின் கட்டம் கட்டமாக சுதந்திரம் பெறும் பிரேரணைத்திட்டத்தை ஒத்துக்கொள்ள முடியாது என்றும் கூறிவிட்டார்கள். அப்போது காந்திஜி பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு காலக் கெடு கொடுக்கலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார். அதன் படி ஒரு வருடத்திற்குள் இந்தியாவுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சார்ந்த சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் அப்படி வழங்கத் தவறினால் காந்திஜியே முன்னின்று முழு சுதந்திரத்திற்கான சட்ட மூலத்தை தயாரித்தளிப்பார் என்றும் யோசனை வழங்கப்பட்டது. இந்த யோசனையை எல்லோரும் அங்கீகரித்தார்கள்.

ஆனால் எவ்வளவோ முயன்றும் சுயாட்சி அந்தஸ்த்து பெறமுடியவில்லை. அதன் விளைவாக அடுத்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் முழு சுதந்திரம் (பூர்ண ஸ்வராஜ்) வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு நேதாஜி பல முறை சிறை சென்று வந்தார். 1930ம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை ஊர்வலம் நடத்திய குற்றத்திற்காக மறுபடி சிறையிலடைத்த பிறகு அந்த செப்டம்பரில் விடுவிக்கப்பட்டார். அவர் இம்முறை சிறையில் இருந்த போது கொல்கத்தாவின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு (1930 மார்ச்சில்) ஷஹீத் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரஸிடம் மிகுந்த வருத்தமும் கோபமும் கொண்டிருந்தார். பகத் சிங்கின் மறைவும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாத காங்கிரஸ் தலைவர்களின் கையாலாகத்தனமும் அவரை வெகுண்டெழச் செய்தது. பகத் சிங்கின் தூக்கிலிடல் முதன் முதலாக அஹிம்சா முறையிலான போராட்டத்தில் அவரை நம்பிக்கையிழக்கச் செய்து, தற்காப்புக்கு சிறந்த வழி தாக்குதலை முதலில் தொடங்குவது தான் என்று நம்ப வைத்தது. 1932ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். அப்போது வியன்னாவுக்குச் சென்றவர் வித்தல்தாஸ் படேல் என்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரரைச் சந்தித்து அவரால் மிகவும் கவரப்பட்டார். இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருந்தது. இருவருமே ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடக்கூடாது என்று கருதினர். ஆனால் அது ஆயுதமேந்திய போராட்டத்துடன் நடைபெற வேண்டும். அப்போராட்டம் எல்லா பக்கங்களிலிருந்தும் தொடுக்கப்பட வேண்டும் என்றும் நம்பினர். அதனுடன் பிரிட்டிஷுக்கு எதிரான நாடுகளுடன் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றிக்கு வழி வகுக்க முடியும் என்பதையும் புரிந்து கொண்டனர்.

                                                            இதன் தொடர்ச்சி ......... பகுதி -3

No comments:

Post a Comment

என்னைப்பற்றி